திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம்மை ஓர் எண்ணம் என்ற அளவில் மீட்கவில்லை
ஜூன்,28,2013. இயேசு நம்மை ஓர் எண்ணம் என்ற அளவில் மீட்கவில்லை. மாறாக, அவர் தம்மையே
தாழ்த்தி மனிதரானார். வார்த்தை மனுவுருவானார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர்
செய்தி, இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மயிலைப்
பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி, விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு, டில்லி பேராயர்
அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 34 பேராயர்கள் இச்சனிக்கிழமையன்று
'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறுவார்கள். புனிதர்கள்
பேதுரு, பவுல் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப்
பேராலயத்தில் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்கும் திருப்பலியில் உலகின் 34 பேராயர்களுக்குப்
'பாலியங்களை அணிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித பேதுருவின் வழித்தோன்றலென
அழைக்கப்படும் உரோமைய ஆயருக்கும், உலகின் பல்வேறு உயர் மறைமாவட்டங்களின் பேராயர்களுக்கும்
உள்ள தொடர்பை வலியுறுத்தும்வண்ணம் பேராயர்கள் தங்களின் கழுத்தில் அணியும் 'பாலியம்' புனித
பேதுரு, பவுல் ஆகிய இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவன்று வழங்கப்பட்டு வருகிறது.