இயேசு சபையினர் மனதுக்கு நெருக்கமானது, கல்விப்பணி - அருள் பணியாளர் Ashley
Evans
ஜூன்,26,2013. இயேசு சபையினருக்கு, கல்விப்பணி எப்போதும் முக்கியமான, மனதுக்கு நெருக்கமான
பணி என்றும், குறிப்பாக, கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் கல்விப்பணி புரிவது
இன்னும் அர்த்தமுள்ளது என்றும் இயேசு சபை அருள் பணியாளர் Ashley Evans கூறினார். கடந்த
20 ஆண்டுகளாக கம்போடியாவில் பணியாற்றிவரும் அயர்லாந்தைச் சேர்ந்த அருள்தந்தை Evans, அந்நாட்டில்
இயேசு சபையினர் துவக்கும் புதிய கல்விப் பணி குறித்து Fides செய்திக்கு அளித்த குறிப்பொன்றில்
இவ்வாறு கூறியுள்ளார். கம்போடியாவின் பட்டம்பங் (Battambang) என்ற இடத்தில் முதல்
நிலைப் பள்ளியொன்றையும், இடைநிலை பள்ளியொன்றையும் இயேசு சபையினர் துவக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். பல
ஆண்டுகளாக கம்போடியாவில் புலம்பெயர்ந்தொரிடையில் பணியாற்றி வந்துள்ள இயேசு சபையினர்,
கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் கல்வித் துறையில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும்,
குறிப்பாக, தொழில் கல்வி வழியாக பல இளையோருக்கு எதிர்காலத்தை உருவாக்கி வந்துள்ளனர் என்றும்,
Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.