வத்திக்கான் இரயில் நிலையத்தில் சிறாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூன்,24,2013. பல நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான சிறாரை இஞ்ஞாயிறன்று வத்திக்கான்
இரயில் நிலையத்தில் சந்தித்து வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு நண்பகல்
மூவேளை உரைக்குப் பின்னர் இச்சிறாரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்பொழுது
இந்த இரயில் பயணம் தொடங்கியது காலை 4.30க்கா அல்லது 5.30 மணிக்கா, இந்த இரயில் பயணம்
எப்படி இருந்தது, இந்த நாள் முழுவதும் என்னச் செய்யப் போகிறார்கள்... என்ற கேள்விகளைக்
கேட்டு அச்சிறாரை அணைத்து முத்தமிட்டார். திருப்பீடக் கலாச்சார அவை நடத்தும் சிறாரின்
முற்றம் என்ற நிகழ்வின் ஒரு கட்டமாக இச்சந்திப்பு இருந்தது. இத்தாலியின் மிலானிலிருந்து
பொலோஞ்ஞா, பிளாரன்ஸ் ஆகிய நகரங்கள் வழியாக வந்த இரயில் பயணத்தில், படைப்பின் கலையை இரசிக்கவும்,
பிம்பங்களின் மொழியைப் புரிந்துகொள்ளவும் சிறாருக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.