2013-06-24 16:46:27

திருத்தந்தை : புனித திருமுழுக்கு யோவானைப்போல் மறைசாட்சிய மரணம் வரையிலும் நற்செய்தி அறிவிப்பு


ஜூன்,24,2013. புனித திருமுழுக்கு யோவானைப்போல் மறைசாட்சிய மரணம் வரையிலும் நற்செய்தியை அறிவிக்க திருஅவை அழைப்பு பெற்றுள்ளது என இத்திங்களன்று புனித மார்த்தா இல்லக்கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் தினமும் வத்திக்கான் பணியாளர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கி வரும் திருத்தந்தை, இத்திங்களன்று வழங்கிய மறையுரையில், அந்நாளில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட தூய திருமுழுக்கு யோவானின் பிறப்புத் திருவிழாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தன்னை பாலைவனத்தின் குரல் என அழைத்த திருமுழுக்கு யோவான், வார்த்தையானவரின் குரலாக இருந்தார், ஏனெனில் வார்த்தை வெறொருவர், அதேபோல் அவர் ஒளியாக இல்லை, ஆனால் இயேசு எனும் ஒளியின் பிரதிபலிப்பாக இருந்தார் என்றார் திருத்தந்தை.
தூய யோவானின் வாழ்வு, திருஅவையின் பணி குறித்து நம்மை சிந்திக்கத்தூண்டுகிறது ஏனெனில், திருஅவை வாழ்வதே இயேசுவின் வார்த்தைக்கு குரலாக இருந்து அறிவிப்பதற்கே எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.