பகிர்வதில் உள்ள குறைகளால் இன்னும் பல கோடி மக்கள் உணவின்றி துன்புறுவது அதிர்ச்சி
தரும் இழிச்செயல் - திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூன்,20,2013. மனித மாண்புடன் அனைத்து மக்களும் பந்தியில் அமர்ந்து உணவு உண்ணும் வழிமுறைகளை
உறுதிசெய்ய உழைக்கும் ஐ.நா. உறுப்பினர்களை வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். ஜூன் 15, கடந்த சனிக்கிழமை முதல் வருகிற சனிக்கிழமை முடிய உரோம்
நகரில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் 38வது அமர்வில்
கலந்துகொள்ள வந்திருக்கும் 400க்கும் அதிகமான பன்னாட்டு உறுப்பினர்களை இவ்வியாழன் காலை
திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், FAO, கடந்த 60 ஆண்டுகள்
பணியாற்றி வருவதைப் பாராட்டினார். உலகில் இன்று உற்பத்தியாகும் உணவைக் கொண்டு அனைத்து
மனிதர்களும் வயிறார உண்ணமுடியும் என்றாலும், பகிர்வதில் நம்மிடம் உள்ள குறைகளால் இன்னும்
பல கோடி மக்கள் உணவின்றி துன்புறுவது அதிர்ச்சி தரும் இழிச்செயல் என்பதை வலியுறுத்தியத்
திருத்தந்தை, செல்வந்தர் உண்ணும் மேசைகளிலிருந்து விழும் துண்டுகள் ஏழைகளைச் சென்றடைவது
ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்றும் கூறினார். இன்று உலகில் நிலவும் வறுமை, வெறும்
பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல, இது நன்னெறி மற்றும் மனசாட்சி தொடர்பான ஒரு பிரச்சனை
என்பதை உலக அரசுகளும், FAO போன்ற உலக நிறுவனங்களும் உணரவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அரசுகளும், நிறுவனங்களும் செயல்படும் வழிகளில் இன்னும் வெளிப்படையான
முறைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இயற்கை பொய்ப்பதால்
மட்டுமே உலகின் பசியும் பட்டினியும் உருவாவதில்லை, மாறாக, சுயநலம் மிக்க சிறு குழுக்களால்
போர்கள் உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக அப்பாவி மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதும்
இந்தப் பிரச்னையை வளர்த்து வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கவலையை
வெளியிட்டார். மதம், மொழி, கலாச்சாரம் என்ற பல எல்லைகளையும் கடந்து செயல்படும் உலக
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தைப் போன்ற சமுதாய அக்கறை கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும்
கத்தோலிக்கத் திருஅவையின் உறுதியான ஆதரவு உண்டு என்றும், திருப்பீடம், FAOவின் பணிகளை
ஆர்வமாய் பின்பற்றிவருகிறது என்றும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்திருந்தோரை
வாழ்த்தினார்.