2013-06-19 16:52:27

திருநற்கருணைச் செபங்களில் புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும்


ஜூன்,19,2013. திருப்பலியின் மத்தியப் பகுதியில் பயன்படுத்தப்படும் 2,3,4 ஆகிய திருநற்கருணைச் செபங்களில் புனித கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருவழிபாட்டுக்கும், அருள் சாதன வழிமுறைகளுக்கும் பொறுப்பான திருப்பீடப் பேராயம் இப்புதனன்று வெளியிட்ட இவ்வறிக்கையில், ஆண்டவராம் கிறிஸ்துவின் குடும்பத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட புனித யோசேப்புவின் பெயர் முதல் திருநற்கருணைச் செபத்தில் தற்போது இடம்பெற்றிருப்பதைப் போல, 2,3,4 ஆகிய திருநற்கருணைச் செபங்களிலும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப் பூர்வ அறிக்கையை வெளியிட்ட, இத்திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Antonio Cañizares Llovera, முத்திபேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இந்த முயற்சியைத் துவக்கினார் என்றும், அவரைத் தொடர்ந்த அனைத்துத் திருத்தந்தையரும் இக்கருத்தை ஆர்வமாக ஆதரித்தனர் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புனித யோசேப்புவின் பெயரை இணைக்கும் அதிகாரப் பூர்வமான வார்த்தைகளை இலத்தீன் மொழியில் வெளியாகியுள்ளன என்றும், விரைவில் ஏனைய மொழிகளில் இந்த வார்த்தைகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் கர்தினால் Cañizares Llovera.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.