ஜூன்,14,2013. இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச்
சந்தித்தபோது உரையாற்றிய ஆங்லிக்கன் பேராயர் Justin Welby, செபம் மற்றும் நற்செய்தி அறிவிப்பு
வழியாக விசுவாசத்தில் நம் ஒன்றிப்பை வெளிப்படுத்துவோம் என்று கூறினார். வன்முறை, அடக்குமுறை,
போர், அநீதியான பொருளாதார அமைப்புமுறைகள், மோசமான அரசு ஆகியவற்றால் கிறிஸ்தவர்கள் கடுமையாய்த்
துன்புறும்போது கிறிஸ்துவின் பெயரால் நாம் அவர்களுக்காகப் பரிந்துபேச வேண்டியதன் அவசியத்தையும்
பேராயர் Welby வலியுறுத்தினார். இந்த நவீன சமுதாயம் முன்வைக்கும் சவால்கள் மத்தியில்
கிறிஸ்தவ விசுவாசத்தை வழங்கும் முறைகளில் நம்மிடையே வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்ந்தே
உள்ளோம், ஆயினும், நமக்கிடையேயான ஆழமான நட்பு இந்த வேறுபாடுகளைக் களைய உதவும் என்றும்
கூறினார் பேராயர் Welby. இயேசுவின் செபத்தில் நம்பிக்கை வைத்து இந்தப் பயணத்தைத் தொடருவோம்
என்றும் தெரிவித்தார் ஆங்லிக்கன் பேராயர் Welby. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை
23ம் அருளப்பர், பிறரன்பால் மனித இதயங்களைக் கொள்ளை கொண்ட மாமனிதர் என்று பாராட்டிப்
பேசினார் பேராயர் Welby.