குழந்தைத் தொழிலாளர் அதிகரிப்புக்கு உலக பொருளாதார நெருக்கடியும் ஒரு காரணம்
ஜூன்,11,2013. இவ்வுலகில் 5 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்களுள் 15 கோடி
பேர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர் என்று யுனிசெஃப் எனப்படும் ஐநாவின் குழந்தைகள்
நிதி அமைப்பு தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர் குறித்த ஐ.நா. விழிப்புணர்வு நாள்
இப்புதனன்று உலகெங்கும் சிறப்பிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள யுனிசெஃப் அமைப்பு,
ஏழ்மையும் குழந்தை தொழிலாளர் முறைக்கு ஒரு காரணம் எனக்கூறுவதுடன், பெற்றோரை இழந்தோர்,
மற்றும் மணமுறிவு பெற்ற குடும்பங்களில் வாழும் சிறார்களே குழந்தைத் தொழிலாளர் முறைக்கு
இரையாவதாகவும் தெரிவிக்கிறது. இன்றைய உலகப்பொருளாதார நெருக்கடியும் குழந்தைத் தொழிலாளர்
முறை வளர்வதற்கு ஒரு காரணமாக இருப்பதாகக் கூறும் யுனிசெஃப் அமைப்பு, இதனால் குழந்தைகள்
தங்கள் துவக்கக்கால கல்வியிலிருந்தே விலகும் சூழல்கள் அதிகரித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.