2013-06-07 16:35:59

இயேசுவின் திரு இருதயத் திருநாள் திருப்பலியில் திருத்தந்தை ஆற்றிய மறையுரை


ஜூன்,07,2013. இறைவன் மீது அன்புகூர்வதைவிட, அவருடைய அன்புக்கு நம் உள்ளங்களைத் திறப்பது இன்னும் கடினமானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட இயேசுவின் திரு இருதயத் திருநாள் திருப்பலியை, புனித மார்த்தா இல்லத்தில் ஆற்றியத் திருத்தந்தை, அளவற்ற அன்பை வெளிப்படுத்திய ஓர் இதயத்தின் அன்பைக் கொண்டாடும் திருநாள் இது என்று கூறினார்.
அன்பு வார்த்தைகளில் அல்ல, செயல்களில் வெளிப்படவேண்டும் என்றும், பெறுவதைவிட, கொடுப்பதில் நமது அன்பு வெளிப்படவேண்டும் என்றும் புனித இஞ்ஞாசியார் கூறிய எண்ணங்களை இறை அன்புக்கு ஒப்புமைப்படுத்திப் பேசினார் திருத்தந்தை.
நமது இறைவன் நமக்கு மிக நெருங்கி வருவதிலும், மென்மையான வழிகளில் அன்பை வெளிப்படுத்துவதிலும் தன் அன்பை வழங்கியுள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, இதே அன்பை நாம் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இயேசு பணித்தார் என்று கூறினார்.
இறைவனை அன்பு செய்வது ஒருவகையில் பார்க்கப் போனால் எளிது ஆனால், அவருடைய அன்புக்கு நம் உள்ளங்களை முற்றிலுமாகத் திறப்பது கடினமானது என்று கூறியத் திருத்தந்தை, இறை அன்புக்கு நம்மை முற்றிலும் சரண் அளிப்பதே அவரை அன்புகூர்வதற்குச் சிறந்த வழி என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வெள்ளியன்று நடைபெற்ற இத்திருப்பலியில், வத்திக்கான் இரகசிய ஆவணங்கள் பாதுக்காக்கப்படும் அலுவலகங்களில் பணியாற்றுவோர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.