திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கோடைக்கால நிகழ்வுகள்
ஜூன்,06,2013. வருகிற கோடைக்காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொதுவான, மற்றும்
தனிப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெறாது என்று திருத்தந்தையின் இல்ல நிர்வாகி இவ்வியாழனன்று
அறிவித்தார். ஜூலை மாதத்தில், 3, 10, 17, 31 ஆகிய நாட்களில் திருத்தந்தையின் புதன்
பொது மறைபோதகங்கள் நடைபெறாது என்றும், இவை, ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மறுபடியும் தொடரும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் வழக்கமாக திருத்தந்தையர் காஸ்தெல்
கந்தோல்போ விடுமுறை இல்லத்திற்குச் செல்வர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கோடைக்காலத்தில்
புனித மார்த்தா இல்லத்திலேயே தங்கியிருப்பார் என்றும், ஜூலை 8ம் தேதி முதல் திருத்தந்தை
அவ்வில்லத்தில் ஆற்றும் திருப்பலிகள் குழுக்களோடு நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை
மாதம் 22ம் தேதி, திங்கள் முதல் 29ம் தேதி முடிய 28வது அகில உலக இளையோர் தின நிகழ்வுகளில்
கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டுக்குச் செல்வார் என்றும்,
அதற்கு முன்னதாக, ஜூலை 14ம் தேதி, திருத்தந்தையர்களின் விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில்
ஞாயிறு நண்பகல் செப உரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.