ஜூன்,01,2013. தென் அமெரிக்க நாடான உருகுவாய் அரசுத்தலைவர் José Alberto Mujica Cordano
அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்புக்குப்
பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு
இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Dominique Mamberti ஆகியோரையும் சந்தித்தார் உருகுவாய்
அரசுத்தலைவர் Mujica Cordano. உருகுவாய் நாட்டின் சமூக-அரசியல் நிலைமைகள், அப்பகுதியில்
உருகுவாய் நாட்டின் பங்கு போன்றவை குறித்த தகவல்களும், சிந்தனைகளும் இச்சந்திப்புக்களில்
பரிமாறப்பட்டன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது. மேலும், ஒருங்கிணைந்த
மனித வளர்ச்சி, மனித உரிமைகள் பாதுகாப்பு, சமுதாய நீதி, அமைதி போன்ற பொதுநலன் சார்ந்த
விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாகத் தெரிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம்,
இந்த விவகாரங்களிலும், அனைத்துலக அமைதியிலும் கத்தோலிக்கத் திருஅவையின் செயல்பாடுகள்
கோடிட்டுக் காட்டப்பட்டன என்றும் கூறியது.