திருத்தந்தை - திருஅவையின் உண்மையான பெருமை சிலுவையில்தான் அடங்கியுள்ளது
மே,29,2013. திருஅவையின் உண்மையான பெருமை சிலுவையில்தான் அடங்கியுள்ளது, அதை விடுத்து,
ஏனைய வழிகளில் திருஅவையின் பெருமையை நிலைநாட்ட முயல்வது வீண் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். ஒவ்வொரு நாள் காலையிலும் 7 மணிக்கு வத்திக்கான் புனித மார்த்தா
இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
இப்புதன் காலை திருப்பலியில் பகிர்ந்த மறையுரையில் இவ்வாறு கூறினார். எருசலேம் நோக்கிச்
செல்லும் கிறிஸ்து தன் பாடுகளைப்பற்றி சீடர்களுக்குக் கூறியதையும், அதனைப் புரிந்து கொள்ளாத
யாக்கோபும், யோவானும் அரியணைகளில் அமர விடுத்த வேண்டுகோளையும் தன் மறையுரையின் மையமாக்கினார்
திருத்தந்தை. இறைவனின் திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் வாழ்வில் சந்தித்த
பிரச்சனை ஒன்றை எடுத்துக்காட்டாகப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின்
திட்டங்கள் சிலுவை வழியாகவே நம் அனைவரையும் அடைகிறது என்பதை எடுத்துரைத்தார். சிலுவையை
மறைத்துவிட்டு, புகழையும், வெற்றியையும் முன்னிறுத்தும்போது, அது அரைகுறை கிறிஸ்துவமாக
அமைகிறதே அன்றி, முழுமையான கிறிஸ்தவமாக மாறுவது கிடையாது என்பதையும் வலியுறுத்தினார்
திருத்தந்தை பிரான்சிஸ். உடனுக்குடன் முடிவுகள் தெரிய வேண்டும் என்று இன்று நாம் விரும்புவதுபோலவே,
அன்றும் இயேசுவின் சீடர்கள் உடனுக்குடன் வெற்றிகளைப் பெறவேண்டும் என்று துடித்தனர் என்றும்,
இது நாம் அனைவரும் சந்திக்கும் சோதனை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில்
தெளிவாக்கினார்.