மே,29,2013. எவரெஸ்ட் சிகரத்தை இரு வீர்கள் முதற்தடவையாக எட்டிய 60வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள்
நேபாளத்தில் நடைபெற்றன. நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறும் வீரர் Sir Edmund Percival
Hillary அவர்களும் நேபாள வீரர், Tenzing Norgay அவர்களும் இணைந்து, இந்த உலகின் மிகவும்
உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி ஏறி அடைந்தனர். வரலாற்றுச்
சிறப்பு மிக்க அந்த நாளின் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, உலகின் பல நாடுகளில், சிறப்பாக,
நேபாளத்தில் விழாக்கள் கொண்டாடப்பட்டன. அந்த சிறப்பான நாளையொட்டி, உலகின் பல நாடுகளில்
மலைப்பகுதிகளில் மாரத்தான் ஓட்டங்களும், எவரெஸ்ட் மலை அடிவாரப் பகுதிகளில், சுத்தம் செய்யும்
பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி முதல் இன்று வரை
எவரெஸ்ட் சிகரத்தில் 5000க்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். Edmund Hillary, Tenzing
Norgay இருவரின் முயற்சியைத் தொடர்ந்து, மலையேறுதல் என்பது மிகவும் பிரபலமான ஒரு வீர
விளையாட்டாக மாறிவிட்டது. தற்போது மலையேறுதல் என்பது ஒரு வணிக நடவடிக்கையாக மாறிவிட்டதாகக்
கூறும் விமர்சகர்கள், எவரெஸ்ட் மலைப் பகுதியில், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தை குறைப்பதற்காக
ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.