2013-05-25 15:45:23

மூவொரு இறைவன் பெருவிழா: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மழலையர்பள்ளி (Kindergarten) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல் அக்குழந்தை, "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னார்.

'இறைவனை யாரும் பார்த்ததில்லை' என்பது வளர்ந்துவிட்ட ஒருவரின் கணிப்பு. 'இறைவனை என்னால் எளிதில் காட்டமுடியும்' என்பது குழந்தையின் நம்பிக்கை. குழந்தையின் வடிவில் இறைவனைக் காணமுடியும் என்பதை ஏறத்தாழ எல்லா மதங்களும் கூறுகின்றன. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் அற்புத வெளிப்பாடாக இறைவன் என்ற பேரொளியின் ஒரு சிறு பொறியாக இவ்வுலகிற்கு வருகின்றனர். வயது வளர வளர, இந்த ஒளி மங்கி, மறைந்துவிடுகிறது.

மத நம்பிக்கையுள்ள கிறிஸ்தவக் குடும்பங்களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா, அப்பா என்ற உறவுகளுக்கு அடுத்தபடியாக அறிமுகமாவது - மூவொரு இறைவன். குழந்தையாக நாம் பிறந்ததும், நம்மைக் காண வந்த ஒவ்வொருவரும் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவன் பெயரால் நம்மை ஆசீர்வதித்தனர். நாம் திருமுழுக்கு பெற்றபோது, மூவொரு இறைவன் பெயரால் நமக்குரிய பெயரை வழங்கினார் பங்குத்தந்தை. பெற்றோர் கோவிலுக்குள் நம்மை சுமந்து சென்றபோதும், தட்டுத் தடுமாறி தளிர் நடைபயின்று நாம் சென்றபோதும் கோவில் வாசலில் இருந்த அர்ச்சிக்கப்பட்ட நீரால் பெற்றோர் நம்மீது சிலுவை அடையாளம் வரைந்து, மூவொரு இறைவனை மீண்டும் மீண்டும் நமக்கு அறிமுகப்படுத்தினர். "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால், ஆமென்" என்ற இந்த எளிய செபமும், அதனுடன் இணைந்து செல்லும் அடையாளச் செயலும் குழந்தைகளின் முதல் செப முயற்சிகள். மழலையருக்கு இவ்விதம் அறிமுகமாவதை இறைவன் நிச்சயம் மகிழ்வுடன் வரவேற்பார்.

இவ்வகையில் நமக்கு அறிமுகமான மூவொரு இறைவனை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் ஓர் அழகிய விழாவை இந்த ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். இன்று மூவொரு இறைவன் பெருவிழா. குழந்தைப் பருவம் முதல் மூவொரு இறைவனாக நம்முடன் வாழும் இறைவன், நாம் வயதில் வளர, வளர, ஒரு மறையுண்மையாக மாறுகிறார். இந்த மறையுண்மையைப் புரிந்துகொள்வதில் நாம் அதிகம் ஈடுபாடு கொள்ளும்போது, உண்மை இறைவனை மறந்துவிட்டு, அவரைப்பற்றி நாம் உருவாக்கியுள்ள சிந்தனைகளைக் கொண்டாடும் ஆபத்து நமக்கு ஏற்படுகிறது. பொருளுள்ள வகையில் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட வேண்டுமெனில், நாம் மீண்டும் குழந்தைகளாக மாறவேண்டும்.

மூவொரு இறைவனையும, குழந்தையையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நம்மில் பலருக்கு புனித அகுஸ்தின் பற்றிய கதை நினைவுக்கு வந்திருக்கும். கடற்கரையில் நடந்தது இந்தக் கதை. இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று புனித அகுஸ்தின் தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடைதேடிக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரையில் ஒரு சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளி எடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தார். சிறுவன் இதுபோல் நான்கைந்து முறை செய்ததைப் பார்த்த அகுஸ்தின் அச்சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றார்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக்கேட்டு, இலேசாகப் புன்னகைத்த புனித அகுஸ்தின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகுஸ்தினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனார்.

அன்று அகுஸ்தின் அக்குழந்தையிடம் கற்றுக்கொண்டது மூவொரு கடவுளைப்பற்றிய உண்மை என்பதைவிட, தன்னைப்பற்றிய உண்மை என்று சொல்வதே பொருந்தும். அக்குழந்தையிடம் கற்றுக்கொண்ட பாடம் புனித அகுஸ்தினை வாழ்நாள் முழுவதும் பணிவுடன் வாழவைத்தது. முக்கியமாக, கடவுளைப்பற்றிய சிந்தனைகளைப் பணிவுடன் கற்றுக்கொள்ள வைத்தது. "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று புனித அகுஸ்தின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்கமுடியாது." என்றார் அவர். United Methodist சபையின் ஆயராகவும், இறையியல் ஆசிரியராகவும் உள்ள William Henry Willimon என்பவர், "நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் நம் மீட்பு கிடையாது. நாம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெறுவதில்தான் நமக்கு மீட்பு கிடைக்கும்" என்று கூறியுள்ளார். “Our salvation is not that we know, but that we are prepared to be known.” - Bishop William H.Willimon

குழந்தைகளுக்குரிய பணிவான மனதை வளர்த்துக் கொள்வதால், வாழ்வின் ஆழமான உண்மைகளை உய்த்துணரலாம். இந்த எண்ணத்தைப் புரிந்துகொள்ள, அமெரிக்க அரசுத் தலைவராய் இருந்த Roosevelt பற்றி சொல்லப்படும் ஒரு கதை உதவியாக இருக்கும். Rooseveltம் அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruchம் ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினார்கள். இரவு அவர்கள் உறங்கச்செல்வதற்கு முன், Roosevelt தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிது நேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Rooseveltன் இந்த யோசனையை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவாகத் தெரிந்த வானத்தையும் அங்கு கண்சிமிட்டிய விண்மீன்களையும் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது புரிகிறது. இப்போது உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt உணர்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பயிற்சியின் மூலம் தனது உண்மை நிலையை அவரால் உணரமுடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், Roosevelt செய்தது குழந்தைத்தனமான ஒரு செயலாக நமக்குத் தெரிகிறது. ஆனால், பரந்து விரிந்த வானத்தை ஓர் ஆழ்நிலை தியானமாய்ப் பார்த்தது, Rooseveltக்கு அவரது நிலையைத் தெளிவாக உணர்த்தியிருக்க வேண்டும். அத்தகைய மனநிலையோடு Franklin Roosevelt உறங்கச்சென்றது அவர் தனக்குத்தானே சொல்லித்தந்த ஓர் அழகியப் பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சிகளும், அடக்கிவிட முடியும் என்ற கனவுகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும். மூவொரு இறைவனின் பெருவிழாவன்று இத்தகையதொரு குழந்தை மனதுடன் இறைவனை நாடிவரும் வரத்தை வேண்டுவோம்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவைகளுக்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்துணர்தல் ஆகிய ஆழமானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை வார்த்தைகளால் விளக்கமுடியாது.
“The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious... He who never had this experience seems to me, if not dead, then at least blind.” – Albert Einstein
"இந்த உலகில் மிக அழகான, ஆழமான அனுபவங்கள் எல்லாமே நாம் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத மறையுண்மைகள். இந்த ஆழமான அனுபவங்களை இதுவரை தங்கள் வாழ்வில் பெறாதவர்களை இறந்தவர்கள் என்று சொல்லலாம். அல்லது, குறைந்தபட்சம், பார்வை இழந்தவர்கள் என்றாகிலும் சொல்லலாம்." என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொல்லிச் சென்றார். நாம் காணும் இந்த உலகின் பல உண்மைகளுக்கு அறிவியல் விளக்கங்களைக் கண்டுபிடித்த அந்த மாமேதையே வெகு ஆழமான உண்மைகளைச் சந்தித்தபோது மௌனம் காத்தார்.

புனித அகுஸ்தின் தன் உள்ளத்தின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய ஓர் உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.
புனித அகுஸ்தின் ‘எப்படி என்ற கேள்விக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் பயின்றிருக்கலாம். நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு, பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயே சென்றுவிடும்.
எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றி ஒரு சில அழகான உண்மைகளை, அதேவேளை, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளை நமக்குச் சொல்லித்தர இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. அதிலும் சிறப்பாக, இறைவனை தன் தந்தையாக, நம் அனைவருக்கும் தந்தையாக அவர் அறிமுகம் செய்தது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. வேறு பலரை, கோபத்தில் ஆழ்த்தியது. அதுவரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க மூவொரு இறைவன் பெருவிழா நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம். மூவொரு இறைவனை அறிவு வாதங்கள் வழியே அறிந்துகொள்வதற்குப் பதில், ஆழ்ந்த அனுபவங்களின் வழியே புரிந்துகொள்வதற்கு, மீண்டும் குழந்தைகளாக மாறும் வரத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.