தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் - மன்னார் ஆயர்
மே,23,2013. பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும்,
நாட்டுக்குத் தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள்
முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அழைப்புவிடுத்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும் என்பதால் இந்தத் தேர்தலை
அரசு நடத்தக்கூடாது என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
அழைப்பு விடுத்துள்ளதைப்பற்றிக் குறிப்பிட்ட மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், இனவாதிகளின்
கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே
ஆகவேண்டும், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், அதேவேளை,
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
என்று விண்ணப்பித்தார். தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும்
என்பதே எனது விருப்பம் என மேலும் கூறினார் ஆயர் இராயப்பு ஜோசப்.