நன்மை செய்யும் எவரையும் தடுப்பது நம் பணியல்ல - திருத்தந்தை
மே,22,2013. 'நன்மை புரிவது' என்ற கொள்கை, மதம் மற்றும் அனைத்து வேறுபட்ட கோட்பாடுகளையும்
கடந்து செயல்படும் ஒரு கொள்கை என்றும், அதுவே மனித கலாச்சாரத்தில் அமைதிக்கு அடிப்படை
என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். இப்புதன் காலை புனித மார்த்தா இல்லத்தின்
சிற்றாலயத்தில், மாரனைட் வழிபாட்டு முறை, அந்தியோக்கு முதுபெரும் தலைவர் கர்தினால் Bechara
Boutros Rai அவர்களுடன் திருப்பலியாற்றிய திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார். தங்களைச்
சாராத ஒருவர், இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவதைத் தடுக்கப் பார்த்ததாகக் கூறிய சீடர்களிடம்,
அவரைத் தடுக்கவேண்டாம் என்று இயேசு கூறியதாக மாற்கு நற்செய்தியில் (9:38-40) காணப்படும்
பகுதியை தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை. கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, வேறு
மக்களையும், ஏன்? கடவுளை நம்பாதவர்களையும் கிறிஸ்து தன் இரத்தத்தால் மீட்டுள்ளார் என்றும்,
எனவே, நன்மை செய்யும் எவரையும் தடுப்பது நம் பணியல்ல என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில்
விளக்கினார். நன்மை புரிவதென்பது மத நம்பிக்கையைச் சார்ந்தது அன்று, மாறாக, இறைவனின்
சாயலில் படைக்கப்பட்டுள்ள அனைத்து மனிதருக்கும் அது ஒரு கடமை என்று வலியுறுத்திக் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.