கர்தினால் Tauran : அரசியல், தூய வாழ்வுக்குப் பாதையாக அமைய முடியும்
மே,21,2013. அரசியல், தூய வாழ்வுக்குப் பாதையாக இருக்க முடியும், ஆனால், கைம்மாறு கருதாமல்
ஒருவர் பொதுநலத் தொண்டில் நுழைய வேண்டுமென்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர்
கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார். EU என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தந்தை எனக்
கருதப்படும் Robert Schuman குறித்த நூலின் ப்ரெஞ்ச் மொழிப் பதிப்புக்கு முன்னுரை எழுதியுள்ள
கர்தினால் Tauran, அரசியல் பொறுப்புக்களில் இருந்துகொண்டு ஒருவர் புனித வாழ்வு வாழ முடியுமா
என்ற கேள்விக்குப் பதில் சொல்லியுள்ளார். Robert Schuman, நற்செய்தி அறிவிக்கும் விழுமிய
வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார் என்றும், அவரது செயல்களும் முயற்சிகளும் தியானத்தால்
உந்துதல் பெற்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Tauran. Robert Schumanஐ புனிதராக
உயர்த்துவதற்கு உதவியாக அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்கள் ஏற்கனவே திருப்பீடத்தில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.