திருத்தந்தை பிரான்சிஸ் : நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து நடத்தப்பட
வேண்டும்
மே,17,2013. நற்செய்தி அறிவிக்கும் திருஅவையின் பணி தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய தேவை
ஏற்பட்டுள்ளது, இந்தப் பணியைச் செய்வதில் பாப்பிறை மறைப்பணிக் கழகங்களுக்குச் சிறப்பான
பங்கு உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின்
தேசிய இயக்குனர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை,
உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்திருக்கும் இவர்களை முதன்முறையாகச் சந்திப்பதில்
தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். உலகில் பலர் இன்னும் கிறிஸ்துவை அறியாமலும்
சந்திக்காமலும் இருக்கின்றனர் என்றும், ஒவ்வொரு மனிதரின் இதயங்களையும் இறைவனின் அருள்
தொடுவதற்குப் புதிய வழிகளையும் புதிய முறைகளையும் உடனடியாகக் காண வேண்டியது அவசியம் என்றும்
கூறினார் திருத்தந்தை. நற்செய்தி அறிவிப்புப் பணி சவால் நிறைந்தது மற்றும் எழுச்சியூட்டுவது
என்றுரைத்த திருத்தந்தை, பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தேசிய இயக்குனர்கள் தங்களது
நாடுகளில் இப்பணியை ஊக்கமுடன் செய்வதற்குத் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டார்.