திருத்தந்தை பிரான்சிஸ் : நமது வாழ்வு உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளதா?
மே,17,2013. நமது வாழ்வு உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தால் நிறைந்துள்ளதா? எனது அன்றாட
வாழ்வில் கடவுளின் இடத்தை எத்தனைப் பொருள்கள் எடுத்துக் கொள்கின்றன? என்று தனது டுவிட்டர்
பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி, இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சனி, இஞ்ஞாயிறு ஆகிய இரு தினங்களில் திருஅவையின் பல்வேறு பொதுநிலை பக்த
இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களைச் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை. வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் துவங்கும் தூய ஆவிப் பெருவிழாவின்
திருவிழிப்புச் செபவழிபாடு மற்றும் இஞ்ஞாயிறன்று காலையில் இடம்பெறும் தூய ஆவிப் பெருவிழாத்
திருப்பலியில், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.