தொடர்ந்து வளர்ந்துவரும் தீவிரவாத சக்தி மனித குலத்திற்கே பெரும் அவமானம் - வத்திக்கான்
உயர் அதிகாரி
மே,15,2013. தீவிரவாதம் அடிப்படையில் மனித உயிரையும், மனித மாண்பையும் துச்சமாக மதிப்பதால்,
தொடர்ந்து வளர்ந்துவரும் இந்த அழிவு சக்தி மனித குலத்திற்கே பெரும் அவமானம் என்று வத்திக்கான்
உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 'ஆப்ரிக்காவில் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம்
- அகில உலகில் அமைதியை நிலைநாட்டுதல்' என்ற தலைப்பில் ஆப்ரிக்காவின் Togo நாடு ஏற்பாடு
செய்துள்ள ஒரு கருத்தரங்கில், திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராக ஐ.நா.வில் பணியாற்றும்
பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார். உலகெங்கும், முக்கியமாக
ஆப்ரிக்க நாடுகளில் அண்மைக் காலங்களாக வெகு விரைவில் தீவிர வாதம் வளர்ந்துள்ளதைக் கண்டனம்
செய்யவும், தடுத்து நிறுத்தவும் உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர்
சுள்ளிக்காட் கூறினார். உயிர்களை அழிக்கும் தீவிரவாத முயற்சிகளைத் தடுக்கவும், உயிர்களை
மதிக்கவும், பேணிக் காக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஆதரிக்கவும் திருஅவை என்றும்
உறுதியாக உள்ளது என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் தன் உரையில் வலியுறுத்தினார்.