மே,15,2013. 1916ம் ஆண்டு வசந்த காலத்தில் ஒரு நாள், 9 வயது லூசியா தோஸ் சாந்தோஸ், இன்னும்
இவருடைய உறவினர்கள் 8 வயது பிரான்சிஸ் மார்த்தோ, 6 வயது ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று
சிறாரும் பாத்திமா என்ற தங்களது சிறிய கிராமத்தில் பசும்புல் நிறைந்த பகுதியில் தங்களது
ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். மழை பெய்யத் தொடங்கியதால் அருகிலிருந்த குகைக்குச்
சென்றனர். பின்னர் மழை ஓய்ந்தது. சூரிய ஒளியும் வீசியது. அம்மூவரும் அக்குகையில் தங்களது
மதிய உணவை அருந்திவிட்டு செபமாலை சொல்லிவிட்டு விளையாடத் தொடங்கினர். மழைக்குப்பின் காலநிலை
அமைதியாக இருந்தது. அப்போது திடீரென பெருங்காற்று வீசியது. மரங்கள் காற்றில் தள்ளாடின.
திடீரென வெண்மைநிற ஒளி அச்சிறாரைச் சூழ்ந்து கொண்டது. அந்த ஒளிக்கு மத்தியில் மேகம் தோன்றியது.
அம்மேகத்தில் ஓர் இளைஞர் தோன்றினார். அவர் அச்சிறாரிடம், பயப்படாதீர்கள், நான் அமைதியின்
வானதூதர், என்னோடு சேர்ந்து செபியுங்கள் என்று சொன்னார். அந்த வானதூதர் தரையில் முழந்தாளிட்டு
தலையை மிகவும் தாழ்த்தினார். அம்மூன்று சிறாரும் அவ்வானதூதர் செய்ததுபோலவே முழந்தாளிட்டு
அவர் சொல்லச்சொல்ல இவர்களும் அதே செபத்தைச் சொன்னார்கள். என் கடவுளே, உம்மை நான் நம்புகிறேன்,
உம்மை வணங்குகிறேன், உம்மை விசுவசிக்கிறேன், உம்மை அன்புசெய்கிறேன். உம்மை நம்பாதவர்கள்,
உம்மை வணங்காதவர்கள், உம்மை விசுவசிக்காதவர்கள், உம்மை அன்புசெய்யாதவர்கள் ஆகியோருக்காக
உமது மன்னிப்பைக் கேட்கிறேன். இவ்வாறு செபித்த பின்னர் வானதூதர் அச்சிறாரிடம் இதேபோல்
செபியுங்கள் என்று சொன்னார். உங்களது இந்தச் செபத்தை இயேசுவின் திருஇதயமும் மரியின் திருஇதயமும்
மிகுந்த கவனத்துடன் கேட்பார்கள் என்று சொல்லி மறைந்தார். இதேபோல் அவ்வாண்டு கோடையிலும்,
இலையுதிர்க் காலத்திலும் வானதூதர் தோன்றி பாவிகளின் மனமாற்றத்துக்காகச் செபிக்கக் கூறினார். வானதூதரின்
இந்த மூன்று காட்சிகளும் அன்னைமரியாவின் காட்சிகளுக்கு அந்த மூன்று சிறாரையும் தயாரிப்பதுபோல்
இருந்தது. 1917ம் ஆண்டு மே 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா
ஆகிய மூன்று சிறாரும் பாத்திமாவுக்கு ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள Cova da Iria என்ற
இடத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது மின்னல்
போன்ற ஓர் ஒளி வானத்திலிருந்து அச்சிறாரை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. பயந்துநடுங்கிய
சிறார் சுற்றிலும் பார்த்தனர். வானம் தெளிவாக இருந்தது. சூரியக் கதிர்களும் கடுமையாக
வீசிக்கொண்டிருந்தன. வீட்டுக்குப் போய்விடலாம் என்று எண்ணி அவர்கள் குன்றிலிருந்து இறங்கி
வந்து கொண்டிருந்தபோது மீண்டும் அதேமாதிரியான ஒளி. அந்த ஒளிவந்த திசையை நோக்கிப் பார்த்தபோது
அங்கு ஒரு பெண் வெண்ணிற ஆடை அணிந்து, சூரியனைவிட ஒளிமிகுந்து காணப்பட்டார். அப்பெண் அச்சிறாரிடம்.
பயப்பட வேண்டாம். நான் உங்களை எதுவும் செய்யமாட்டேன் என்று சொன்னார். நீங்கள் எங்கிருந்து
வருகிறீர்கள் என்று சிறார் கேட்க, நான் வானகத்திலிருந்து வருகிறேன் என்றார். பின்னர்
லூசியா அப்பெண்ணிடம், நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, நீங்கள்
அடுத்த ஆறு மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதத்தின் 13ம் தேதியன்று இதே நேரத்துக்கு இங்கு வரவேண்டும்,
ஆறாவது தடவையில் நான் யார் என்று சொல்வேன் என்று சொன்னார். நீங்கள் உங்களைக் கடவுளுக்கு
அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா, அவர் மகிழ்ச்சியோடு அனுப்பும் துன்பங்களை பாவிகளின் மனமாற்றத்திற்காக
ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் நிறையத் துன்புற வேண்டியிருக்கும், ஆயினும் கடவுளின் அருள்
உங்களைத் தாங்கிப் பிடிக்கும் என்று சொன்னார். பின்னர் தனது கரங்களைத் திறந்து தாய்க்குரிய
பாசத்தைக் காட்டினார். பின்னர் ஓர் ஒளியில் அப்பெண் மறைந்தார். மறைந்து கொண்டிருக்கும்போதே,
உலகில் அமைதி கிடைக்கவும், போர் முடியவும் தினமும் செபமாலை செபியுங்கள் என்று சொன்னார்
அப்பெண். அவர்தான் அன்னைமரியா. பாத்திமா அன்னைமரியா. பாத்திமாவுக்கு அருகில் அன்னைமரியா
காட்சிகள் கொடுத்தபோது முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அன்னைமரியா அந்த மூன்று
சிறாரிடம் கூறியதுபோல, அவர்கள் இன்னும் 50 பேருடன் ஜூன் 13ம் தேதி அவ்விடத்தில் அதேநேரத்தில்
செபமாலை செபித்துக் கொண்டிருந்தனர். இக்காட்சியில் லூசியா நீண்ட நாள்கள் இவ்வுலகில் வாழ்வார்
என்பது குறித்து அன்னைமரியா கூறினார். லூசியா தனது 97வது வயதில் 2005ம் ஆண்டு பிப்ரவரி
13ம் தேதி உள்ளூர் நேரம் மாலை 5.25 மணிக்கு இறந்தார். ஆனால் பிரான்சிஸ் 1919ம் ஆண்டு
ஏப்ரல் 4ம் தேதியன்றும், ஜசிந்தா 1920ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதியன்றும் இறந்தனர்.
இந்த முத்திப்பேறு பெற்றவர்களின் கல்லறைகள் பாத்திமாவில் அன்னைமரியா பசிலிக்காவில் உள்ளன.
1917ம் ஆண்டின் அன்னைமரியின் காட்சிகளுக்குப் பின்னர் லூசியா புனித டாரத்தி சகோதரிகள்
கன்னியர் இல்லத்தில் சேர்ந்து வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். பின்னர் கோயெம்ப்ரா
அடைபட்ட கன்னியர் இல்லத்தில் சேர்ந்தார். 1925ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி குழந்தை இயேசுவும்
அன்னைமரியும் லூசியாவுக்குக் காட்சி கொடுத்துள்ளனர். நன்றிகெட்ட மனிதர்களால் எனது இதயம்
முள்களால் நிறைந்துள்ளது என்று அப்போது அன்னைமரி சொன்னார். செபமாலை செபிக்கவும் கூறினார். 1917ம்
ஆண்டு ஜூலை 13ம் தேதியன்று லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறாருக்கு மூன்றாவது
தடவையாகக் காட்சி கொடுத்தார் அன்னைமரியா. இக்காட்சியில் இரஷ்யாவை தனக்கு அர்ப்பணிக்கும்படிக்
கேட்டுக்கொண்டார். இம்முறை ஒரு பெரிய கூட்டமே அச்சிறாருடன் சேர்ந்து செபமாலை சொல்லிக்கொண்டிருந்தது.
நீங்கள் யார் என்றும், நீங்கள் காட்சி கொடுப்பதை இக்கூட்டம் நம்புவதற்குப் புதுமை ஒன்றையும்
செய்ய வேண்டும் என்றும் லூசியா அன்னைமரியாவிடம் கேட்டார். அதற்கு அன்னைமரியா, நீங்கள்
தொடர்ந்து இங்கு வாருங்கள். அக்டோபரில் நான் யார் என்றும், நான் உங்களிடமிருந்து விரும்புவது
என்ன என்றும், எல்லாரும் நம்பும்வண்ணம் புதுமை செய்வேன் என்றும் சொன்னார். நான்காவது
காட்சியின்போது ஆகஸ்ட் 13ம் தேதியன்று மக்கள் பெருந்திரளாய்க் கூடியிருந்தனர். ஆனால்
இம்மூன்று சிறாரும் அவ்விடத்துக்குப் போகக் கூடாது என்று அரசு அதிகாரிகள் அவர்களை இரண்டு
நாள்களாக அடைத்து வைத்திருந்தனர். காட்சியைப் பார்க்கவில்லை என்று சொல்லுமாறு அச்சுறுத்தி
துன்புறுத்தினர். ஆனால் அச்சிறார் அதிகாரிகளிடம் சரணடையவே இல்லை. பின்னர் அவர்களை ஆகஸ்ட்
19ம் தேதியன்று விடுதலை செய்தனர். அச்சிறார் பெருங்கூட்டத்தோடு சென்று கொண்டிருந்தபோது
Valinhos என்ற இடத்தில் ஒரு மரத்துக்குமேல் அன்னைமரியாவைப் பார்த்தனர். லூசியா அவரிடம்,
நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், 13ம் தேதியன்று
Cova da Iria என்ற இடத்துக்குப் போகவேண்டும், தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்க வேண்டும்
என்று சொன்னார். பின்னர், அன்னைமரியா மிகுந்த சோகத்துடன், செபியுங்கள், நிறையச் செபியுங்கள்,
பாவிகளுக்காக உங்கள் தியாகங்களை அர்ப்பணியுங்கள் என்று சொன்னார். செப்டம்பர் 13ம்
தேதியன்று இடம்பெற்ற ஐந்தாவது காட்சியின்போது அச்சிறாருடன் ஏறக்குறைய 30 ஆயிரம் பேர்
கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்தபோது அதே மரத்துக்கு
மேலே அன்னைமரியா காட்சி கொடுத்தார். போர் முடிவதற்காகத் தொடர்ந்து செபமாலை செபியுங்கள்
என்றார். அடுத்த அக்டோபர் காட்சியின்போது நம் ஆண்டவர், வியாகுல அன்னை, கார்மேல் அன்னை,
புனித வளன் ஆகியோர் வந்து உலகை ஆசீர்வதிப்பர். கடவுள் உங்கள் தியாகங்கள் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்
என்றார் அன்னைமரியா. அக்டோபர் 13ம் தேதியன்று அச்சிறாருடன் ஏறக்குறைய 70 ஆயிரம் பேர்
கூடியிருந்தனர். பருவமழை கொட்டியது. அன்னைமரியா காட்சி கொடுத்தார். லூசியா அவரிடம்,
நீங்கள் என்னிடமிருந்து என்ன விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு அன்னைமரியா, நானே
செபமாலையின் அன்னைமரியா, இங்கு என் பெயரில் ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும், மக்கள் தொடர்ந்து
தினமும் செபமாலை செபிக்க வேண்டும், போர் முடியும், படைவீரர்கள் தங்கள் வீடுகளுக்குத்
திரும்புவர் என்று தெரிவித்தார். மக்கள் கடவுளைப் புண்படுத்தக் கூடாது, ஏற்கனவே கடவுள்
பாவிகளால் அதிகம் புண்பட்டுள்ளார் என்று கூறினார். இன்று பாத்திமாவுக்கு எண்ணற்ற பயணிகள்
ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். பாத்திமா அன்னையின் திருவிழாவான மே,13, இத்திங்களன்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணித்துச்
செபித்தார் லிஸ்பன் கர்தினால் Policarpo. பாத்திமாவில் அம்மூன்று சிறாருக்கு அன்னைமரியா
காட்சி கொடுத்ததன் 96ம் ஆண்டு நிறைவுத் திருப்பலியை இத்திங்களன்று நிகழ்த்திய கர்தினால்
Policarpo, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார். திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், தனது திருப்பணிக் காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது. 1981ம் ஆண்டு மே 13ம் தேதியன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை
2ம் ஜான் பால் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சுடப்பட்டு குணமான பின்னர் பாத்திமா
சென்று நன்றி தெரிவித்தார். நாமும் தினமும் செபமாலை செபிப்போம்.