சிரியாவின் பிரச்சனை, மேற்கின் புவியியல்அரசியல் யுக்தியின் ஓர் அங்கம் : சிரியாவின்
முதுபெரும் தலைவர்
மே,14,2013. சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகள், மத்திய கிழக்கில் சிரியாவையும்
பிற நாடுகளையும் பிரிக்கும் மேற்கத்திய நாடுகளின் புவியியல்அரசியல் யுக்தியின் விளைவே
என்று சிரியாவின் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Ignatius Joseph III Younan குறை கூறினார். மக்களாட்சியையோ
அல்லது பன்மைத்தன்மையையோ ஊக்குவிப்பதாக மேற்கத்திய நாடுகள் எம்மிடம் கூறுகின்றன, ஆனால்
இது உண்மையல்ல, இது வெளிவேடம் என்று குறை கூறினார் முதுபெரும் தலைவர் 3ம் Younan. சிரியாவில்
தற்போது இடம்பெற்றுவரும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றுரைத்த
முதுபெரும் தலைவர் 3ம் Younan, சிரியாவில் இடம்பெறும் சண்டையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டைச்
சுற்றியுள்ள நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் தாங்கள் எச்சரிக்கை விடுப்பதாகவும்
கூறியுள்ளார். CNS என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த முதுபெரும்
தலைவர் 3ம் Younan, சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து சிரியா அரசுத்தலைவர் Bashar
Assadஐ சர்வாதிகாரி என்று சொல்லி அவரது ஆட்சி கவிழ வேண்டுமென்று மேற்கத்திய நாடுகள் சொல்லி
வருகின்றன, இப்போது 25 மாதங்கள் ஆகியும் சண்டை முடியவில்லை, நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே
போகிறது என்றும் தெரிவித்தார். லெபனன் நாட்டில் மட்டும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட
சிரியா அகதிகள் உள்ளனர். இவர்கள் லெபனன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.