"தொழுநோயாளர் பல்மருத்துவர்" என்று அழைக்கப்படும் Kang Dae-gunஅவர்களுக்கு
Seoul உயர்மறை மாவட்டம் பாராட்டு விழா
மே,09,2013. கடந்த 33 ஆண்டுகளாக ஏழைகள் மத்தியில், சிறப்பாக, தொழுநோய் எனப்படும் Hansen
நோயுற்றோருக்கு இலவசமாக பல் மருத்துவம் செய்து வந்த ஒரு கத்தோலிக்க மருத்துவருக்கு தென்கொரிய
தலத் திருஅவை பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. "தொழுநோயாளர் பல்மருத்துவர்" என்று
அழைக்கப்படும் மருத்துவர் Kang Dae-gun அவர்கள், தன் 82வது வயதில் பணி ஒய்வு பெறுவதாகக்
கூறியதைத் தொடர்ந்து, Seoul உயர்மறை மாவட்டம் அவருக்கு பாராட்டு விழா ஒன்றை அண்மையில்
நடத்தியது. Hansen நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 1979ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில்
பல் மருத்துவம் செய்து வந்துள்ள மருத்துவர் Dae-gun அவர்கள், இதுவரை 15,000க்கும் மேற்பட்டோருக்கு
இலவசமாக இச்சேவையைச் செய்துள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எவ்வித
விருதையும் விரும்பாத மருத்துவர் Dae-gun அவர்கள், Hansen நோயுற்றோரை சமுதாயம் புறக்கணிப்பதைக்
கண்டபின், அவர்களுக்கு இலவசமாகச் சேவைகள் செய்ய ஆரம்பித்தார் என்று இச்செய்திக் குறிப்பு
மேலும் கூறுகிறது.