சிரியாவில் கடத்தப்பட்ட இரு ஆயர்களின் தகவலைப் பொருத்தவரை இன்னும் இருளில் இருக்கிறோம்
- அலெப்போ பேராயர்
மே,08,2013. சிரியாவில் ஏப்ரல் 22ம் தேதி கடத்தப்பட்ட இரு ஆயர்கள் குறித்த எவ்வித தகவலும்
இல்லாததால், அவர்கள் தேடலைப் பொருத்தவரை இன்னும் இருளில் இருக்கிறோம் என்று அலெப்போவின்
கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறை பேராயர் Jeanclement Jeanbart கூறினார். இரு வாரங்களுக்கு
முன்பு கடத்தப்பட்ட சிரிய ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim அவர்களையும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ்
ஆயர் Boulos Yaziji அவர்களையும் மீட்பதற்கு கத்தோலிக்கத் திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும்
இணைந்து உழைத்து வருவதாக Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. இவ்விரு ஆயர்களையும்,
மற்றும் பிப்ரவரியில் கடத்திச் செல்லப்பட்ட இரு குருக்களையும் விடுவிக்கவேண்டும் என்று
பல நாடுகளிலிருந்து விண்ணப்பங்களும், வேண்டுதல்களும் எழுப்பப்பட்டுள்ளன என்று ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக சிரியாவில் இணையதளமும் துண்டிக்கப்பட்டிருப்பதால்,
வெளி உலகிற்கும் அந்நாட்டிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர் என்றும்,
இந்தத் தொடர்பு துண்டிப்புக்கு காரணம் தெரியாமல் இருக்கின்றனர் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.