ஆர்த்தடாக்ஸ் பேராயர் Kawak : சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு
துருக்கி உதவ வேண்டும்
மே,04,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள எமது இரண்டு ஆயர்கள் விடுதலை செய்யப்படுவதில்
துருக்கிக்கு முக்கியமான பங்கு உள்ளது என்று சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரின்
அலுவலகத்துக்குப் பொறுப்பான பேராயர் Jean Kawak கூறியுள்ளார். சிரியாவின் வட பகுதி
முழுவதும் ஏதோ ஒருவகையில் தற்போது துருக்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடத்தப்பட்டுள்ள
இவ்விரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு, கடத்தல்காரர்களுடன் துருக்கி
பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது என்று Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்
பேராயர் Kawak. இவ்விரு ஆயர்களும் விடுதலை செய்யப்படுவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு
தூதரக மற்றும் மனிதாபிமான முயற்சிகளிலும் துருக்கி நாட்டின் தலைவர்கள் ஈடுபடுத்தப்பட
வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் Kawak. சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் பேராயர்
Gregorios Yohanna Ibrahim, சிரியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yazigi
ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 22ம் தேதி மனிதாபிமானப் பணிகளை முடித்துத் திரும்பியபோது
அலெப்போவுக்கு அருகில் கடத்தப்பட்டனர்.