2013-05-02 16:08:48

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்


மே,02,2013. பிப்ரவரி 28ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவுக்குச் சென்ற முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இவ்வியாழன் மாலை உரோம் நேரம் 4.30 மணியளவில் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்.
ஹெலிகாப்டர் மூலம் வத்திக்கான் வந்தடைந்த முன்னாள் திருத்தந்தையை, தற்போதையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் ஹெலிகாப்டர் தளத்தில் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் உரையாடியபின், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள "Mater Ecclesiae" என்ற துறவு மடத்தில் தங்கச் சென்றார்.
திருத்தந்தையருக்கு தங்கள் முழு நேரச் செபங்களால் அருள் சகோதரிகள் ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்துடன் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு முழுநேர தியான இல்லம் "Mater Ecclesiae".
1994ம் ஆண்டிலிருந்து, 2012ம் ஆண்டு முடிய நான்கு துறவுச் சபைகளைச் சேர்ந்த அருள் சகோதரிகள் இவ்வில்லத்தில் தங்கி, திருத்தந்தையருக்கு முழு நாளும் செபங்களை எழுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்துறவு இல்லத்தில் தங்கி, தன் வாழ்வை இனி செபங்களில் செலவிடப் போவதாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்தபடி, அவ்வில்லத்தில் இவ்வியாழன் தங்கச்சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.