சிரியாவில் கடத்தப்பட்ட பேராயர் உடல் நிலையைக் குறித்த கவலைகள்
மே,02,2013. பத்து நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட சிரியாவின் இரு பேராயர்களில் ஒருவர்
இரத்த அழுத்தம், மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவராதலால் அவருடைய உடல் நிலையைக்
குறித்த கவலைகளை தலத் திருஅவை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 22ம் தேதி Aleppo நகரில்
ஆயுதம் தாங்கிய ஒரு கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பேராயர் John Ibrahim, பேராயர் Paul
Yagizi ஆகிய இருவரைக் குறித்த எவ்விதத் தகவலும் இதுவரைக் கிடைக்காதச் சூழலில், பேராயர்
Ibrahim அவர்களின் உடல்நிலை குறித்த கவலைகளை Aleppo உயர்மறை மாவட்ட பிரதிநிதி ஒருவர்
CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டார். பிப்ரவரி 9ம் தேதி கடத்திச்
செல்லப்பட்ட இரு குருக்களின் விடுதலையைக் குறித்து முயற்சிகளை மேற்கொண்டிருந்த இவ்விரு
பேராயர்களும் நாட்டின் ஒற்றுமைக்காக அயராது உழைத்தவர்கள் என்று இப்பிரதிநிதி கூறினார். நாட்டின்
அமைதிக்காகப் பாடுபட்ட இவ்விரு பேராயர்களும் அந்த இலக்கை அடைய மிக உயர்ந்த வகையில் தங்கள்
உயிரையே பணயம் வைத்துள்ளனர் என்று அலெப்போ உயர் மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.