வன்முறையைக் கையாண்டுள்ள புத்த மத குழுவுக்கு எதிராக, இலங்கையில் பல்சமய
ஊர்வலம்
மே,01,2013. அடிப்படைவாத எண்ணங்களுடன் வன்முறையைக் கையாண்டுள்ள ஒரு புத்த மத குழுவின்
செயல்பாடுகளை எதிர்த்து, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இச்செவ்வாயன்று பல்சமய ஊர்வலம்
நடைபெற்றது. 'புத்த அதிகாரத்தின் சக்தி' என்று பொருள்படும் "Bodu Bala Sana" என்ற
புத்த மதக் குழு, வன்முறை வழியாக தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட முயல்வது வேதனையைத் தருகிறது
என்று தென் இலங்கையின் Galle ஆயர் Raymond Wickramasinghe கூறினார். இஸ்லாமியர்கள்
மத்தியில் உருவாகியுள்ள 'தாலிபான்' குழுக்களைப் போல "Bodu Bala Sana" குழு செயல்படுவதால்,
ஊடகங்கள் இக்குழுவினரை 'புத்த தாலிபான்கள்' என்று குறிப்பிட்டுள்ளன. இந்து, கிறிஸ்தவம்,
இஸ்லாம் ஆகிய சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டுள்ள
இக்குழுவின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான புத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்
இணைந்து கொழும்புவில் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.