மேதினத்தையொட்டி இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தி
மே,01,2013. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள், மற்றும் மறைமாவட்டங்கள் அனைத்தும்,
நீதியான ஊதியம் வழங்குவதிலும், முறைசாரா உழைப்பாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும்
கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ஆயர்கள் பேரவை விண்ணப்பித்துள்ளது. இப்புதனன்று
கொண்டாடப்படும் மேதினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின்
உழைப்பாளர் பணிக்குழு, உழைப்பாளர்களின் சமுதாயப் பாதுகாப்பில் அதிகம் கவனம் தேவை என்பதை
வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் வேலை தேடி வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வரும் உழைப்பாளிகளின்
தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஒரு தனிப்பட்ட
பணிக்குழு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பும் இச்செய்தில் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்
இன்னும் பரவலாகக் காணப்படும் குழந்தை உழைப்பாளர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியத் தலத்
திருஅவை தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின்
உழைப்பாளர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி Jaison Vadassery, UCAN செய்தியிடம் கூறினார்.