2013-04-27 16:47:49

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 70 ஆயிரம் இளையோரும்


ஏப்.27,2013. திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் விசுவாச ஆண்டின் ஒரு நிகழ்வாக, ஏறக்குறைய 70 ஆயிரம் இளையோர் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இச்சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில், ஏற்கனவே உறுதிபூசுதல் திருவருள்சாதனத்தைப் பெற்றவர்கள், இன்னும் அதனைப் பெறாதவர்கள் என ஏறக்குறைய 70 ஆயிரம் இளையோர், திருத்தந்தை அவர்களால் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படுவர்.
இதனை அறிவித்த, இந்நிகழ்வுகளை நடத்தும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு காலை திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில், 44 பேர் அவரிடமிருந்து உறுதிபூசுதல் திருவருள்சாதனத்தைப் பெறுவர் எனவும் கூறியது.
இந்த 44 பேரும் 11 வயதுக்கும் 55 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றுரைத்த திருப்பீட அவை, விசுவாச ஆண்டின் இரண்டாவது முக்கிய நிகழ்வாக, பொதுவான பக்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி வருகிற மே 3 முதல் 5 வரை நடைபெறும் எனவும் அறிவித்தது.
இந்நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, மே 5 ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ் எனவும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவை அறிவித்தது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.