2013-04-26 15:43:17

மடகாஸ்கர் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு


ஏப்.26,2013. ஆப்ரிக்காவின் மடகாஸ்கர் நாட்டில் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிச்செல்லவிருக்கும் Andry Nirina Rajoelina அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Rajoelina.
மடகாஸ்கர் நாட்டுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நல்ல உறவுகள் இருந்து வருவது குறித்து, இனிதாக இடம்பெற்ற இச்சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், அந்நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகக் கூறியது.
மடகாஸ்கரின் பொருளாதார முன்னேற்றம், அந்நாடு பன்னாட்டு அளவில் உறவுகளைக் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம், உறுதியான தன்மையையும் சனநாயகத்தையும் அமைப்பதற்கு அந்நாடு தற்போது எடுத்துவரும் முயற்சிகள், கத்தோலிக்கத் திருஅவையின் பங்கு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதாகத் தெரிவித்தது திருப்பீட பத்திரிகை அலுவலகம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.