2013-04-26 15:37:31

திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் அழகான முகத்தைக் காண்பதற்கு நமது இதயங்கள் தயார் செய்யப்படுகின்றன


ஏப்.26,2013. இறைவனின் அழகான முகத்தைக் காண்பதற்கு நமது விசுவாசப் பயணம் நமது இதயங்களைத் தயார் செய்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலை நிகழ்த்திய திருப்பலியில், உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம் என்று இயேசு தமது இறுதிப் பரியாவிடை உரையின்போது தம் சீடர்களுக்குக் கூறிய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய சிறிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
சோதனைகள், ஆறுதல்கள், கலக்கங்கள், நல்லவைகள் ஆகியவற்றோடு நம் ஆண்டவர் நமது வாழ்வுப் பயணத்தில் நமது இதயங்களைத் தயார் செய்கின்றார் என்றுரைத்த திருத்தந்தை, நமது வாழ்வுப் பயணம் முழுவதும் தயாரிப்பின் பயணமாக இருக்கின்றது என்றும் கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வு முழுவதும் இயேசுவின் பணியாக இருக்கின்றது, நமது ஆன்மாவின் கண்கள் இயேசுவின் அழகான முகத்தைத் தியானிப்பதற்குத் தயார் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விண்ணகத்திற்கானத் தயாரிப்பு என்பது தூரத்தில் இருந்து அவரை வாழ்த்துவதற்குத் தொடங்குவதாகும், இயேசு நமது இதயங்களைத் தயார் செய்வதற்கு அனுமதிப்பதாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், விண்ணக வீட்டுக்கு நமது கண்களையும், இதயங்களையும், நமது செவிப்புலனையும் தயார் செய்வதற்கு நம் ஆண்டவரை அனுமதிப்பதற்கு அவர் நமக்கு நம்பிக்கையையும், துணிச்சலையும், தாழ்ச்சியையும் தர வேண்டுமென்று செபிப்போம் எனவும் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.