பிலிப்பின்ஸ் அரசு, மக்களுக்குத் தகுந்த அரசாக இயங்கவில்லை - அந்நாட்டின்
துறவியர் அமைப்பு
ஏப்.25,2013. பிலிப்பின்ஸ் நாட்டில் Benigno Aquino தலைமையில் பணியாற்றும் அரசு, மக்களுக்குத்
தகுந்த அரசாக இயங்கவில்லை என்று அந்நாட்டின் துறவியர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிலிப்பின்ஸ்
நாட்டில் பணியாற்றும் இருபால் துறவியரின் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்
பிரதி ஒன்று Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருக்கும்
பிலிப்பின்ஸ் அரசு, மனித உரிமைகள் மறுப்பு, ஊழல், நிலப் பங்கீட்டில் குறைகள், சுற்றுச்சூழல்
சீர்கேடு என்ற பல அம்சங்களிலும் சரிவர செயலாற்றவில்லை என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல
உயர்மட்ட அரசு அதிகாரிகளின் குற்றங்கள் நிரூபணமானபோதிலும், 2010ம் ஆண்டுக்குப் பிறகு,
இவர்களில் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அரசு
அனுமதியுடன், பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சுரங்கத்தொழில், சட்டங்களையெல்லாம்
கடந்து நடத்தப்படுகின்றது என்றும், இதனால் நாட்டின் இயற்கைவளங்கள் அனைத்தும் பெரும் ஆபத்துக்கு
உள்ளாகி வருகின்றன என்றும் துறவுச் சபைகளின் தலைவர்கள் குறை கூறியுள்ளனர்.