பிரேசில் செல்லும் பயணம் ஒன்றே இவ்வாண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொள்ளும் வெளிநாட்டுப்
பயணமாக இருக்கும்
ஏப்.25,2013. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில்
கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்லும் பயணம் ஒன்றே இவ்வாண்டில் அவர் மேற்கொள்ளும்
வெளிநாட்டுப் பயணமாக இருக்கும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள் பணியாளர்
Federico Lombardi கூறினார். இப்புதன் மாலை செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி Lombardi
அவர்கள், ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில்
பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேறு எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் தற்போது
திட்டமிடவில்லை என்று கூறினார். நம்பிக்கை ஆண்டையொட்டி, முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் அவர்கள் வெளியிட எண்ணியிருந்த சுற்றுமடலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும்
வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றும் அருள் தந்தை Lombardi கூறினார். தற்போது திருத்தந்தையரின்
கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவில் தங்கியுள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அல்லது, அடுத்த மாதத் துவக்கத்தில் வத்திக்கானுக்குள்
அமைந்துள்ள Mater Ecclesiae இல்லத்தில் தங்குவார் என்றும் அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.