பிரான்சில் ஒரே பாலினத் திருமணச் சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள்
ஏப்.24,2013. பிரான்சின் தேசிய சட்டமன்றத்தில் இச்செவ்வாயன்று ஒரே பாலினத் திருமணத்திற்கு
ஆதரவாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளவேளை, ஒரே பாலினத் திருமணத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கு
அச்சுறுத்தலாக அமையும் என்று அந்நாட்டு ஆயர்கள் எச்சரித்துள்ளனர். பிரான்சின் தேசிய
சட்டமன்றத்தில் இச்செவ்வாயன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஒரே பாலினத் திருமணத்திற்கு
ஆதரவாக 331 வாக்குகளும், இதற்கு எதிராக 225 வாக்குகளும் பெற்று இம்மசோதா அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஒரே பாலினத் திருமணச் சட்டத்தை எதிர்த்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
இஞ்ஞாயிறன்று பாரிசில் பேரணி ஒன்றையும் நடத்தினர். மேலும், பிரான்சில் ஒரே பாலினத் திருமணச்
சட்டம் குறித்த எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று ஊடகச்
செய்திகள் கூறுகின்றன. இவ்விவகாரம் குறித்து வாக்கெடுப்பு நடந்த இச்செவ்வாயன்று ஏறக்குறைய
நான்காயிரம் காவல்துறையினர் தேசிய சட்டமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.