மனித வாழ்வின் மதிப்பு என்ன? கேள்வி கேட்கிறது இந்தியத் திருஅவை
ஏப்.23,2013. இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ 50 ஆயிரம் சிறார் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாகியுள்ளதைக் குறிப்பிட்டு, நாட்டில் மனித வாழ்வு எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்ற
கேள்வியை எழுப்பியுள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Dominic D'Abreo. டெல்லியில்
5 வயதுச் சிறுமி இரண்டு கயவர்களால் கடத்தப்பட்டு 48 மணிநேரங்கள் பாலியல் சித்ரவதைக்கு
உள்ளாகியிருப்பது குறித்து ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அருள்பணி D'Abreo, இந்தியாவில்,
2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 48,338 சிறார் பாலியல் வன்செயல்
வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இந்தியா முழுவதும் அதிர்ச்சியில்
உறைந்துள்ள இவ்வேளையில், மனித வாழ்வு குறித்து மக்கள் கொண்டுள்ள மதிப்பை கலாச்சார, சமய
மற்றும் மனிதயியலின் அடிப்படையில் சிந்திக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் அருள்பணி
D'Abreo. மனித வாழ்வின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உயர்மட்ட அளவில் மட்டுமல்லாமல்,
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.