பூமியைக் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரை
பூமியைக் காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பரிந்துரை
ஏப்.22,2013. சுற்றுச்சூழல்
சீர்கேட்டால் இவ்வுலகம் பெருமளவில் கண்டுவரும் இழப்பை சீர்செய்வதற்கு உதவும் விதமாகக்
கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக பூமி தினத்தை முன்னிட்டு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஏப்ரல் 22ம் தேதி இத்திங்கள்கிழமை உலகில் சிறப்பிக்கப்பட்ட
உலக பூமிதினம் குறித்து செய்தி வெளியிட்ட ஆர்வலர்கள், ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம்
வளர்க்கவும், அனைத்துவகை குப்பைகளைக் குறைக்கவும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும்
அழைப்புவிடுத்துள்ளனர். மறுசுழற்சி பொருட்களைப் பயன்படுத்துதல், மின்சாரத்தைச் சேமித்தல்,
பாலிதீன் பயன்பாட்டை குறைத்தல், குறைந்த தூரம் செல்ல மோட்டார் வாகனப் பயன்பாட்டை தவிர்த்தல்,
மாசுக்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். பாடப்புத்தகங்களில்
சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களைச் சேர்த்து, வருங்கால தலைமுறையினர், சுற்றுச்சூழலைப்
பாதுகாக்கும்முறை பற்றித் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
பரிந்துரைத்துள்ளனர். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் கைலார்ட் நெல்சன் என்பவரின்
தீவிர முயற்சியால், 1970ல் இத்தினம் தொடங்கப்பட்டது. தற்போது எர்த் டே நெட்வொர்க் என்ற
அமைப்பில் 175க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.