சிட்டகாங் ஆயர் : பங்களாதேஷ் சமுதாயம் புதிய தெய்வநிந்தனை சட்டத்தை விரும்பவில்லை
ஏப்.20,2013. பங்களாதேஷில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய தெய்வநிந்தனை சட்டத்தைப் புறக்கணிக்கும்
நோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் பொதுவான முயற்சிகளை எடுத்து வருகின்றன என்று சிட்டகாங்
துணை ஆயர் Lawrence Subrato Howlader கூறினார். பொதுவாகப் பார்த்தோமானால் புதிய தெய்வநிந்தனை
சட்டத்துக்கு மக்கள் ஆதரவாக இல்லை, ஆனால் சில தீவிரவாதக் குழுக்களே இச்சட்டத்தைப் பரிந்துரை
செய்தன என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறிய ஆயர் Lawrence, இச்சட்டத்தைக் கொண்டு
வருவது இயலாத காரியம் என்று அரசு சொல்லியிருப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவையும், சிறுபான்மை
சமுதாயங்களும் அரசைப் பாராட்டியுள்ளன என்று தெரிவித்தார். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள
புதிய தெய்வநிந்தனை சட்டத்தில் 13 பரிந்துரைகள் உள்ளன, இவற்றில் பல பரிந்துரைகள் பங்களாதேஷின்
அரசியல்அமைப்புக்கு முரணானவை என்றும் ஆயர் தெரிவித்தார். பங்களாதேஷில், புதிய தெய்வநிந்தனை
சட்டத்தை ஆதரித்து வருகிற மே 4,5 தேதிகளில் இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் மாபெரும் பேரணிகளை
நடத்தவுள்ளன.