2013-04-19 16:07:43

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணிக்காலம் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு


ஏப்.19,2013. வருகிற மே 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்கவுள்ளனர் போர்த்துக்கல் நாட்டு ஆயர்கள்.
தனது பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தைப் பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தையின் சிறப்பான வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக, பாத்திமா அன்னையின் விழாவான வருகிற மே 13ம் தேதி போர்த்துக்கல் நாட்டு ஆயர்கள் இந்நிகழ்வை நடத்தவுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணியை அர்ப்பணிக்கும் இந்நிகழ்வில் திருப்பயணிகள் கலந்துகொள்ளுமாறு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலமணிநேரங்களுக்குப் பின்னர் போர்த்துக்கல் நாட்டுக் கர்தினால் José Policarpoடம் பேசிய திருத்தந்தை, தனது பாப்பிறைத் தலைமைப்பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.