அருள் பணியாளர்கள் மேற்கொள்ளும் தினசரி பணிகளுக்கு அருள்பொழிவு உந்துதலாக இருக்கும்
- கர்தினால் Mauro Piacenza
ஏப்.17,2013. தாங்கள் அருள்பொழிவு செய்யப்பட்டுள்ளவர்கள் என்பதை அருள் பணியாளர்கள் ஒவ்வொரு
நாளும் உணரும்போது, அவர்கள் மேற்கொள்ளும் தினசரி பணிகளுக்கு அது உந்துதலாக இருக்கும்
என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அருள் பணியாளர்களை உருவாக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளோரை போலந்து நாட்டின் Krakow நகரில் இச்செவ்வாயன்று மாலை சந்தித்த, அருள்
பணியாளர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Mauro Piacenza, அருள் பொழிவைப்
பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். மக்களை
மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் பணிக்கே அருள் பொழிவு செய்யப்படுகிறோம் என்று, புனித வியாழன்
காலை, அருள் பொழிவுக்குப் பயன்படுத்தப்படும் புனித எண்ணெயை அர்ச்சிக்கும் திருப்பலியை
நிறைவேற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் Piacenza சுட்டிக்காட்டினார்.
அருள் பணியாளர்களின் வாழ்வையும், பணியையும் குறித்து வத்திக்கான் வெளியிட்டுள்ள 160
பக்கங்கள் அடங்கிய புதிய நூல் ஒன்றை இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார் கர்தினால் Piacenza.