Pacem in Terrisசுற்றுமடலிலிருந்து இந்தியா பல பாடங்களைக் கற்றுக்
கொள்ள வேண்டியுள்ளது - இந்திய ஆயர் பேரவை
ஏப்.12,2013. ஐ.நா.பொது அவையில் முன்வைக்கப்பட்ட ஆயுத வர்த்தகக் கோட்பாட்டை ஏற்காத 24
நாடுகளில் ஒன்றான இந்தியா, 50 ஆண்டுகளுக்கு முன் திருஅவையால் வெளியிடப்பட்ட Pacem in
Terris, அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள
வேண்டியுள்ளது என்று இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. 1963ம் ஆண்டு
ஏப்ரல் 11ம் தேதி திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களால் வெளியிடப்பட்ட
'உலகில் அமைதி' என்ற சுற்று மடலின் 50ம் ஆண்டு நினைவையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் நீதி,
அமைதி, முன்னேற்றப் பணிக்குழு இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இப்பணிக்குழுவின்
தலைவர் ஆயர் Yvon Ambroise, பணிக்குழுவின் உறுப்பினர்களான ஆயர் Mathew Arackal, ஆயர்
Gerald Almeida ஆகியோரின் சார்பிலும், செயலர் அருள்தந்தை Charles Irudayam சார்பிலும்
இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபா ஏவுகணை நெருக்கடி நேரத்தில் அமேரிக்கா, சோவியத்
ஒன்றியம் ஆகிய இரு வல்லரசுகள் மத்தியில் உருவான இறுக்கமானச் சூழலை மனதில்கொண்டு திருத்தந்தை
23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலின் நோக்கம், அனைத்து நல்
மனதோரையும் அமைதியின் முயற்சியில் ஒருங்கிணைப்பதே என்பதை இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. 2003ம்
ஆண்டு இச்சுற்று மடலின் 40ம் ஆண்டு நிறைவுற்றபோது, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 2ம்
ஜான்பால் வெளியிட்ட மடலையும் இந்திய ஆயர் பேரவையின் இவ்வறிக்கை நினைவுபடுத்துகிறது. பாதுகாப்பு
என்ற பெயரில் வளரும் நாடுகள் ஆயுதங்களுக்குச் செலவிடும் பெரும் தொகையால் அந்நாடுகளின்
உண்மையான வளர்ச்சி பெரிதும் பாதிக்கபப்டுகிறது என்பதையும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.