2013-04-11 15:49:16

வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அகில உலகக் கருத்தரங்கில் கர்தினால் பீட்டர் டர்க்சன்


ஏப்.11,2013. உலகில் வாழும் வறியோர், மற்றும் உலக படைப்பில் இறைவனின் திட்டங்கள் என்ற பின்னணியில் போர், அமைதி ஆகிய எண்ணங்களைச் சிந்திக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாட்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள அமெரிக்க கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் ‘அமைதியைக் கட்டியெழுப்புதல்’ என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற ஓர் அகில உலகக் கருத்தரங்கில் இப்புதனன்று பேசிய திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
"Pacem in Terris", அதாவது, 'உலகில் அமைதி' என்ற சுற்றுமடலை திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்கள் 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிட்ட நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் கர்தினால் டர்க்சன் கத்தோலிக்கத் திருஅவை உலக அமைதிக்கென மேற்கொண்டு வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவும், சோவியத் இரஷ்யாவும் நேரடி மோதலில் ஈடுபடவிருந்த கியூபா நெருக்கடிக்குப் பின் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் விடுத்த இந்தச் சுற்றுமடலிலிருந்து, 'அமைதியின் கருவியாய் என்னை மாற்றும்' என்ற அழகிய செபத்தை உலகிற்கு வழங்கிய புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தற்போதையத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளது வரை, அனைத்து முயற்சிகளிலும் உலக அமைதியை நிலைநாட்ட கத்தோலிக்கத் திருஅவை வெகுவாக முயன்று வருகிறது என்று கூறினார் கர்தினால் டர்க்சன்.
வறுமை ஒழிப்பு, உயிர்கள் மீது காட்ட வேண்டிய மரியாதை, நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உலக அமைதியை நிலைநாட்ட முடியும் என்று கர்தினால் டர்க்சன் தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.