வறுமையைப் போக்க திருஅவையின் பல்வேறு அறக்கட்டளைகள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குரியவை
- திருத்தந்தை
ஏப்.11,2013. இறைமக்களின் தேவைகள் ஒவ்வொரு நாளும் பெருகிவரும் சூழலில், பொருளாதார முறையிலும்,
ஆன்மீக வழியிலும் எழும் வறுமையைப் போக்க திருஅவையின் பல்வேறு அறக்கட்டளைகள் ஆற்றும் பணிகள்
பாராட்டுக்குரியவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். திருத்தந்தையின் அறக்கட்டளை
என்ற பொதுவான பெயருக்குக் கீழ் பணியாற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் உறுப்பினர்கள் தற்போது
உரோம் நகரில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வுறுப்பினர்களில் 120க்கும் அதிகமானோரை
இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வறக்கட்டளைகள்
ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார். அருள் பணியாளர்களின் பயிற்சிகளுக்கும், வறியோரின்
துயர் துடைப்புப் பணிகளுக்கும் நிதி உதவி செய்துவரும் பல்வேறு அமைப்புக்கள் கடந்த 25
ஆண்டுகளாக ஆற்றிவரும் உதவிகளைத் திருத்தந்தை பாராட்டினார். கடவுளின் கருணையை உலகிற்குப்
பறைசாற்றும் வகையில் உழைக்கும் இவ்வறக்கட்டளைகளை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பார் என்று
கூறிய திருத்தந்தை, கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை
வழங்கினார்.