சுற்றுச் சூழல் குறித்த கனடா நாட்டு ஆயர்கள் அறிக்கை
ஏப்.10,2013. இயற்கையை இறைவன் உருவாக்கியதில் உள்ள திட்டத்தையும், அதில் மனிதர்கள் பெறும்
முக்கியமான இடத்தையும் உணர்ந்தால் பல்வேறு நன்னெறி கோட்பாடுகள் தெளிவாகும் என்று கனடா
நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர். "புதியதோர் கலாச்சாரத்தை உருவாக்குதல்: சுற்றுச்சூழல்
குறித்த திருஅவையின் அண்மைய படிப்பினைகள்" என்ற தலைப்பில் கனடா நாட்டு ஆயர்கள் பேரவையின்
நீதி, அமைதிப் பணிக்குழு இத்திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை
சுற்றுச் சூழல் குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு அல்ல என்றும், இந்தப் பிரச்சனைகளை
அறிவு சார்ந்த முறையில் வாதாட உதவும் ஓர் அறிக்கையே இது என்று இப்பணிக் குழுவின் உறுப்பினரான
ஆயர் Donald Bolen, CNS செய்தியிடம் கூறினார். எட்டு அம்சங்களைக் கொண்ட இந்த அறிக்கையில்
மறைந்த திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற இரண்டாம் ஜான் பால், முன்னாள் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட் ஆகியோர் இயற்கையைப் பேணுதல் பற்றி கூறிய பல கூற்றுகள் இடம்பெற்றுள்ளன என்று
ஆயர் Bolen விளக்கினார்.