இலங்கையில் வீடு கட்டும் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் வழங்கியது இந்திய அரசு
ஏப்.08,2013. இலங்கையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, வீடு கட்டித்தரும்
திட்டத்துக்காக, இந்திய மத்திய அரசு, இரண்டாம் கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இலங்கையில்
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக, தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின்
கீழ், முதல் கட்டமாக 1000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாதங்களுக்கு
முன் துவக்கப்பட்ட இரண்டாம் கட்ட பணிகளுக்காக, இதுவரை, 100 கோடி ரூபாயை, மத்திய அரசு
வழங்கியுள்ளது. இந்தத் தொகையை வைத்து, பயனாளிகள், தாங்களாகவே, வீடுகளைக் கட்ட வேண்டும்
என்ற நோக்கில், இந்திய அரசால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில், நேரடியாக பணம் செலுத்தப்பட்டு
வருகிறது. இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், 43,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. இவற்றில்,
39,000 வீடுகள், இலங்கையின் வடக்கு மாவட்டதிலும், 4,000 வீடுகள், கிழக்கு மாவட்டத்திலும்,
கட்டித்தரப்படவுள்ளன.