ஏப்ரல் 07, உயிர்ப்புக்காலம் – 2ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை
அமெரிக்காவின் Texas
மாநிலத்தில் Athens என்ற நகரில் வாடகைக் கார் ஓட்டிவந்தவர் Patrick Greene. இவர் இறை
நம்பிக்கையற்றவர். தன் இல்லத்தைச் சுற்றி வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படையாகக்
காட்டும் முயற்சிகளை வன்மையாக எதிர்த்து வந்தார். கிறிஸ்மஸ் விழாவையொட்டி Athens நகரின்
நீதி மன்றத்திற்கு வெளியே குடில் ஒன்று அமைக்கப்பட்டபோது, சிறு கூட்டம் ஒன்றைத் திரட்டி,
போராட்டம் நடத்தினார். நகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். டிசம்பர் மாத இறுதியில்,
Patrickக்குக் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மருத்துவ ஆய்வில், இவருக்கு அறுவைச் சிகிச்சை
தேவை என்றும், அச்சிகிச்சைக்குப் பிறகும் கண் பார்வை முற்றிலும் திரும்புமா என்பது உறுதியில்லை
என்றும் சொல்லப்பட்டது. அவரால் வாடகைக் கார் ஓட்ட முடியாமல் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று.
அவர் தொடுத்திருந்த வழக்கினால், அவரிடம் வங்கியிலிருந்த சேமிப்பும் கரையத் துவங்கியது.
எனவே, சில வாரங்களில் அவர் தன் வழக்கை 'வாபஸ்' பெற்றுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைபட்டார். அவருடைய
அயலவர்களில் ஒருவர் Jessica Cyre. இவர் Baptist கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர். Patrickன்
உடல் நிலையைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் தொடுத்திருந்த வழக்கைப் பற்றியும் Jessicaவுக்குத்
தெரியும். இருப்பினும், Patrickகிற்கு உதவ முன்வந்தார். "இறைவன் அன்பை கிறிஸ்தவர்கள்
வழியாக Patrickஅனுபவித்ததில்லை என்று நினைக்கிறேன். தன் வழக்குகள்
மூலம் அவர் எங்களை ஒரு கன்னத்தில் அறைந்துள்ளார். மறு கன்னத்தை அவருக்குக் காட்டும் தருணம்
இது" என்று Jessica ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். Patrickன் உடல்
நிலையைப் பற்றி அவர் தன் கோவிலில் எடுத்துக்கூறினார்.
ஊரே அறிந்த கடவுள் நம்பிக்கையற்ற
ஒருவரின் மருத்துவச் செலவுக்கு அக்கோவிலைச் சேர்ந்தவர்கள் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
Patrick அந்த நிதியை வாங்க மறுத்தார். தன் அறுவைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும்
என்று மருத்துவர்கள் உறுதி கூறாததால், Patrick அறுவைச் சிகிச்சை மீதும் நம்பிக்கையற்று
போனார். அவரது மறுப்பையும் பொருட்படுத்தாது, Baptist ஆலய உறுப்பினர்கள் வேறு எவ்வகையில்
அவருக்கு உதவமுடியும் என்று Patrickஇடம் கேட்டனர். தனக்கு எந்த வேலையும் இல்லாததால்,
தன் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க ஏதாவது நிதி உதவி செய்யும்படி அவர்களிடம்
கேட்டுக்கொண்டார். அந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் தன் தேவைகளுக்காக ஒருவேளை பத்து அல்லது
20 டாலர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார் Patrick. சில நாட்கள் சென்று, Baptist
ஆலயத்திலிருந்து அவருக்கு 400 டாலர்கள் வந்து சேர்ந்தன. நாட்கள் செல்லச் செல்ல, அவருக்கு
இன்னும் அதிக உதவிகள் வந்தன. அவர் இல்லத்தைச் சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவக் குடும்பங்கள்
அவர் இல்லத்திற்கு வந்து நேரம் செலவழித்தனர், அவருக்காகச் செபங்கள் செய்தனர். அவர்கள்
அன்பில் அவர் தினமும் மூழ்கினார். கடவுள் மறுப்பு என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டிருந்த
அவரது பெருமையும், நம்பிக்கையும் அடியோடு சரிந்தன. உயிர்ப்புத் திருவிழாவுக்கு முன் அவர்
ஒரு கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். அச்சபையின் பணியாளர்களில் ஒருவராக மாற அவர் பயிற்சிகள்
மேற்கொண்டு வருகிறார்.
Patrick Greene தன் வாழ்வில் இறைவனை உணர்ந்தது நமக்கெல்லாம்
நல்லதொரு பாடம். இறைவனை நேரில் சந்திப்பதோ, இறை அனுபவத்தை நேரடியாகப் பெறுவதோ நடக்காத
காரியம் என்பதால், இறைவனை நம்ப மறுத்தவர் Patrick. இறை நம்பிக்கை கொண்டவர்களை ஏளனமாகக்
கருதினார்; வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பதில்
பெருமை கொண்டார். அவரை இறைவன் சந்தித்தார். அவர் எதிர்பார்த்த நேரடி அனுபவத்தில் அவரைச்
சந்திக்கவில்லை, மறைமுகமாக, ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தின் வழியாக இறைவன் அவரைச் சந்தித்தார். இறை
நம்பிக்கையற்றவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்த Patrick, கண் பார்வையை இழக்க
ஆரம்பித்தபோது வேறு பல உண்மைகளைக் காண முடிந்தது. உடலளவில் பார்வை இழந்து, உள்ளத்தில்
பார்வை பெற்ற Patrick போன்றவர்களை மனதில் எண்ணி, இயேசு கூறும் அழகியச் சொற்களை இன்றைய
நற்செய்தி இவ்விதம் சொல்கிறது: "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்"(யோவான்
20: 29)
சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது.
உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை 'இறை இரக்கத்தின்' ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.
இறை இரக்கம் அல்லது இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேக மேகங்கள் கலைந்துவிடும்
என்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கிறிஸ்தவ மறையின் ஆணிவேர் இயேசு கிறிஸ்துவின்
உயிர்ப்பு. இந்த மறையுண்மை இல்லையெனில் கிறிஸ்தவ மறை அர்த்தமில்லாமல் போய்விடும். நம்பிக்கை
ஆண்டைக் கொண்டாடிவரும் இந்நேரத்தில், நம் விசுவாசத்தின் அடித்தளமான உயிர்த்த கிறிஸ்துவை
மீண்டும் ஒருமுறை இஞ்ஞாயிறன்று சந்திக்க வந்திருக்கிறோம்.
சென்ற வாரம், எரியும்
மெழுகுதிரிகளை ஏந்தி, பாஸ்காப் புகழுரையைப் பாடி, இயேசுவின் உயிர்ப்பை அறிக்கையிட்டபோது
நமக்குள் ஒரு நிறைவும் மகிழ்வும் தோன்றியதை உணர்ந்தோம். உயிர்த்த இயேசு இன்று நமக்கு
முன் தோன்றினால், உடனே அவர் திருவடி பணிந்து நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட
எவ்விதத் தயக்கமும் இருக்காது. முதல் உயிர்ப்புத் திருவிழாவில் இத்தகைய மகிழ்வு,
நிறைவு, உற்சாகம் இருந்ததாகத் தெரியவில்லை. அது ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான்.
சந்தேகம்... உயிர்த்த இயேசுவைச் சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும் அடிப்படையில்
இழையோடிய ஓர் உணர்வு... சந்தேகம். இந்த நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக இன்று நாம் நற்செய்தியில்
காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.
நம் வாழ்வை
ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஒரு
கூட்டு உணர்வு; பல உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம்,
கோபம், வருத்தம், நம்பிக்கையின்மை என்ற பல உணர்வுகள் கூட்டுக் குடித்தனம் செய்யும்.
சந்தேகத்திற்கு
ஓர் எடுத்துக்காட்டாக விவிலியத்தில் கூறப்படும் ஒரு மனிதர் தோமா. உண்மை பேசுபவரை "அரிச்சந்திரன்"
என்றும், தாராள மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல், சந்தேகப்படும்
யாரையும் “சந்தேகத் தோமையார்” என்று அழைக்கிறோம். அவ்வளவு தூரம் தோமா சந்தேகத்தின் மறுபிறவியாக
மாறிவிட்டார். தோமா இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும் நம்மில்
பலர், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்... உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து "என்ன
மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட
முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு." என்ற தீர்ப்பையும்
தந்து விடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறுவது எளிது.
இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி
தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவ பாரம்பரியத்தில்
இன்று வாழும் நமக்கே அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது.
அப்படியிருக்க, உயிர்ப்பு பற்றிய எண்ணங்களில் தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு
முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக
அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு. கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ,
நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து
போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம்.
ஆகவே, தீர்ப்புகளை வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுந்து
வருவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி,
இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.
உயிர்த்த இயேசுவைக் கண்டதும் அனைத்துச் சீடர்களுக்கும்
கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன. இயேசுவிடம் கேட்க
முடியாமல், மனதுக்குள் மற்ற சீடர்கள் புதைத்து வைத்திருந்த இதே சந்தேகத்தைத்தான் தோமா
வாய்விட்டுச் சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல்,
எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து
கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து
கொள்ள முயல்வோம்.
தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு
இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில்
இயேசுதான் அவர்களது உலகம் என்று ஆகிப் போன நேரத்தில், அந்த உலகம் ஆணி வேரோடு வெட்டப்பட்டு,
சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து அவர்கள் கட்டியிருந்த பல மனக்
கோட்டைகள் தரை மட்டமாக்கப்பட்டன. எருசலேமில், கல்வாரியில் அவர்கள் கண்ட காட்சிகள்
அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற
வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில்
ஒருவரே இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த
நம்பிக்கை தொலைந்து போனது. சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை
உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.
நம் வாழ்வையும்
சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும் சிந்தனையையும் இறுகப்
பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும்
சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்து காட்டினார். மனதில்
துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க வாய் வார்த்தைகள் மட்டும் போதாது, சில வேளைகளில் ஆங்கிலத்தில்
சொல்வதுபோல் 'physical proof', உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். இவை அனைத்தையும் இயேசு
வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையை
நிரூபணமாக அளிப்பதாலும் தோமாவை அவரது நம்பிக்கையற்ற கல்லறையிலிருந்து இயேசு உயிர்ப்பிக்கிறார்.
இயேசுவின்
அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால் தோமா இயேசுவைத்
தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் அவர் மனதை இயேசு
மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என்
ஆண்டவர்! நீரே என் கடவுள்!"(யோவான் 20: 28)இயேசுவை, கடவுள் என்று கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த்
தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும் பறைசாற்றினார்
தோமா.
இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு
எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும்
சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து
உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில்
உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.