முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களின் செயலராகப் பணியாற்றிய பேராயர் Loris
Capovillaஅவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசி தொடர்பு
ஏப்.03,2013. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் தனிப்பட்டச் செயலராகப்
பணியாற்றிய பேராயர் Loris Capovilla அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் இத்திங்கள் மாலை
தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி திருத்தந்தை
23ம் ஜான் "Pacem in Terris", அதாவது, 'உலகில் அமைதி' என்ற புகழ்பெற்ற சுற்றுமடலை வெளியிட்டார்.
அம்மடலின் 50ம் ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அம்மடலை எழுத திருத்தந்தை
23ம் ஜான் அவர்களுக்குப் பெருமளவு உதவிகள் செய்த அந்நாள செயலரும், தற்போது 98 வயது நிரம்பியவருமான
பேராயர் Capovilla அவர்களை வாழ்த்தி, திருத்தந்தை பிரான்சிஸ் தொலைபேசியில் பேசினார். இத்தொலைபேசி
அழைப்பு தனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்வையும் அளித்தது என்று கூறிய பேராயர்
Capovilla, திருத்தந்தை தன்னைச் சந்திக்க விழைவதாகக் கூறியதால், Bergamoவில் தங்கியிருக்கும்
தான் அவரை வத்திகானில் சந்திக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறினார். 1960களில்
அணு ஆயுதங்கள் பெருகி வந்த நேரத்தில் வெளியான "Pacem in Terris" சுற்றுமடல், கத்தோலிக்கத்
திருஅவை என்ற வட்டத்தையும் தாண்டி நல் மனதுள்ளவர்கள் அனைவரும் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டுமென விடுக்கப்பட்ட ஓர் அழைப்பாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரம் –
Vatican Insider