திருத்தந்தை பிரான்சிஸ் : உயிர்த்த கிறிஸ்துவின் சக்தி ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோர்
மற்றும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும்
ஏப்.01,2013. கிறிஸ்து தீமையை முழுமையாகவும் முடிவாகவும் வென்றுவிட்டார், ஆயினும், இவ்வெற்றியை
தங்களது வாழ்விலும், வரலாறு மற்றும் சமுதாயத்தின் உண்மைத்தன்மைகளிலும் ஏற்றுக்கொள்வது
நம்மைச் சார்ந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். வானதூதரின் திங்கள் என
அழைக்கப்படும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாளான திங்களன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான்
தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி
உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார். நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக
ஆக்கும் திருமுழுக்கும், நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கும் திருநற்கருணையும் நமது வாழ்வாக
மாற வேண்டுமென்றும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இவை நமது எண்ணங்களிலும்,
நமது புரிந்துகொள்ளுதலிலும், நமது நடத்தைகளிலும், செயல்களிலும், நாம் தெரிந்தெடுப்பவைகளிலும்
வெளிப்பட வேண்டுமென்றும் கூறினார். உமது திருஅவையை வளரச்செய்யும் எம் வானகத்தந்தையே,
உமது விசுவாசிகளாகிய நாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை திருவருள்சாதன வாழ்வில் வெளிப்படுத்த
உதவி செய்யும் என, இதற்காகவே இன்றைய திருவழிபாட்டில் நாம் செபிக்கிறோம் என்றும் திருத்தந்தை
கூறினார். பாஸ்கா திருவருள்சாதனத்தில் அடங்கியுள்ள திருவருள் நமது தனிப்பட்ட, குடும்ப
மற்றும் சமூக வாழ்வைப் புதுப்பிப்பதற்கு அளவற்ற சக்தியைக் கொண்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை,
ஒவ்வொன்றும் மனித இதயங்களின் வழியாகச் செல்வதால், உயிர்த்த கிறிஸ்துவின் அருளோடு நாம்
ஒத்துழைத்தால், நமக்கும் மற்றவருக்கும் தீமையை விளைவிப்பவற்றை அவ்வருள் நன்மையாக மாற்றும்,
அவ்வருள், நம் வாழ்விலும், உலகிலும் பெரிய மாற்றத்தைக் கொணரும் என்றும் கூறினார். இறையருளின்றி
நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, திருமுழுக்கு மற்றும் திருநற்கருணையின் அருளால் நாம் கடவுளின்
கருணையின் கருவியாக மாற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார். பாஸ்கா மறைபொருள்,
நம்மிலும் நம் காலத்திலும், வெறுப்பை அன்பாகவும், பொய்மையை மெய்மையாகவும், பழிவாங்குதலை
மன்னிப்பாகவும், வருத்தத்தை மகிழ்ச்சியாகவும் மாற்றும்பொருட்டு அன்னைமரியின் பரிந்துரை
வழியாக உயிர்த்த கிறிஸ்துவிடம் செபிப்போம் என்று தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவு
செய்து அனைவரோடும் சேர்ந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தையும் செபித்தார் திருத்தந்தை
பிரான்சிஸ். மேலும், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்துக்குக் கீழே இருக்கின்ற
தூய பேதுருவின் கல்லறைக்கு இத்திங்கள் மாலையில் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் செபிப்பது
இத்திங்களன்று அவரது செயல் திட்டங்களில் ஓன்றாக உள்ளது