வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத்தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென் கிழக்கு
ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக பாப்புவா நியூ கினியில் பயிரிடப்பட்டது. இந்நாள்களில்
வெப்பமான பகுதிகளெங்கும் வாழை பயிரிடப்படுகிறது. வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு
கி.மு 600ம் ஆண்டு புத்தமத ஏடுகளில் காணப்படுகிறது. கி.பி 650ம் ஆண்டில் முகலாயர்கள்
இந்தியாவிலிருந்து வாழையை மத்திய கிழக்குப் பகுதிக்கு கொண்டுவந்தனர். அரேபிய வணிகர்கள்
வாழையை ஆப்ரிக்காவெங்கும் பரப்பினர். பின்னர் போர்த்துக்கீசிய வணிகர்கள் மூலமாக வாழை
அமெரிக்காவிற்குச் சென்றது. உலகில், வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்குவதோர் (9%),
பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. பொதுவாக வாழைப்பழத்தை உண்பதால் மலச்சிக்கல்
நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகின்றன. இப்பழம், “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக
நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது. மூளையில்
“செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை
நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தோல், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை
அகற்றுவதில் சிறப்பாக செயல்படுவதாக, பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசையன்ஸ் நிறுவன ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். காலை உணவு, மதிய உணவு, பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு
3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி, அதன் மூலம் மூளையில்
இரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.