திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான்
மார்ச்,27,2013. ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான், ஆயினும் ஆண்டவருக்கு
நம்பிக்கையுள்ள பணியாளராக இருக்க விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். வத்திக்கானில்
பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்புதன் காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில்
கர்தினால் Angelo Comastri அவர்கள் ஆற்றிய சிறப்புத் திருப்பலிக்குப் பின், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், அவ்வூழியர்களைச் சந்தித்து உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத்
தெரிவித்தபோது இவ்வாறு கூறினார். ஒரு சில நிமிடங்களே நீடித்த இந்த சந்திப்பை, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 23ம் ஜான் குறித்த ஒரு நகைச்சுவை கூற்றுடன் துவக்கினார். ஒரு
முறை திருத்தந்தை 23ம் ஜான் அவர்களைச் சந்தித்த ஒரு வெளிநாட்டுத் தூதர் வத்திக்கானில்
எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று கேட்டதற்கு, திருத்தந்தை 23ம் ஜான், "பாதி பேர்" என்று
கூறியதை நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கு கூடியிருந்த ஊழியர்கள் அந்தப்
பாதிப் பேரில் அடங்குவர் என்று குறிப்பிட்டார். இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தையைச்
சந்தித்தது தங்கள் அனைவருக்கும் ஓர் ஆனந்த அதிர்ச்சியே என்று கர்தினால் Comastri திருத்தந்தையிடம்
எடுத்துரைத்தார்.